ட்ரெண்டிங்

சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவர் மீது பாய்ந்தது போக்சோ!

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட நடுப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (டிச.07) சிறுமியை ஒரு முதியவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுள்ளார். இவர் சிறுமியின் உறவினர் என்று தகவல் கூறுகின்றன.

 

பள்ளி வகுப்பு முடிந்து மாலையில் வீடு திரும்பிய சிறுமி, தன்னை காலை பள்ளிக்கு அழைத்துச் சென்றவர் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர், காக்கையான்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல் (வயது 60) என்பவர் தான் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பது தெரிய வந்தது. அவரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.