ட்ரெண்டிங்

சேலத்தில் கடத்தி வரப்பட்ட ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் பறிமுதல்!

 

தருமபுரியில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர், சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது, அந்த வழியாக வைக்கபுல் ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது வைக்கப்புல்லுக்கு அடியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்துகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தி கொண்டு வரப்பட்ட தலா 25 கிலோ எடைக் கொண்ட 100 ஜெலட்டின் ஜெல் பெட்டிகள், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

அத்துடன், வாகனத்தை ஓட்டி வந்த இளையராஜா என்பவரை கைது செய்து, ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.