மேட்டூர் அணைக்கான நீர்வரத்துக் குறைந்தது!
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து குறைந்ததை அடுத்து, அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 29) மாலை 04.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 18,058 கனஅடியில் இருந்து 13,839 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 65.59 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 29.02 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்துக் குறைந்துள்ளதால், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.