ட்ரெண்டிங்

வழிப்பறி வழக்கில் புதிய திருப்பம்......காவல்துறைக்கு குவியும் பாராட்டு! 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை உடையாப்பட்டி பைபாஸ் அருகில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடனில் வசூலான ரூபாய் 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் யுவராஜ் (வயது 40), குமார் (வயது 23) ஆகியோர் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். 

உடையாப்பட்டி நூல் மில் அருகே வந்துக் கொண்டிருந்த ஊழியர்களின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி 4 பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி ஊழியர்கள் வைத்திருந்த ரூபாய் 12 லட்சம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு, கண் இமைக்கும் நொடியில் தப்பிச் சென்றது. இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து, காவல் ஆய்வாளர் பால்ராஜ், வழிப்பறிக் குறித்து வழக்குப்பதிவுச் செய்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார். அதேபோல், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வழித்தடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் ஆய்வுச் செய்தனர். 

குறிப்பாக, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி வரையிலான 55 கி.மீ. தூரம் வரையிலான சி.சி.டி.வி. காட்சிகளையும், சேலம் ராசிபுரம்- செந்தாரப்பட்டி வழியாக 77 கி.மீ. தூரம் வரையிலான சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், செந்தாரப்பட்டியில் கொள்ளையர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து, வழிப்பறி செய்தவர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என சந்தேகித்த காவல்துறையினர், செந்தாரப்பட்டியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து ஊழியர்களான செந்தாரப்பட்டியைச் சேர்ந்த ரவியின் மகன் புவனேஸ்வரன் (வயது 21), செந்தில்குமார் மகன் சுபாஷ் (வயது 22) மற்றும் அவர்களின் கூட்டாளிகளான கஜேந்திரன் (வயது 23), விக்னேஷ் (வயது 32) ஆகிய வழிப்பறியில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்ததுடன், அவர்கள் நால்வரையும் அதிரடியாக கைது செய்ததுடன், ரூபாய் 4.50 ரொக்கம், 4 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அம்மாப்பேட்டை காவல்துறையினர், நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக, கைதானவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரில், காவல்துறையினர் திருச்சி மாவட்டம், துறையூரில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.