ட்ரெண்டிங்

திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் ஆல்பம் டெலிவரி....AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனம்

 

நவீன நாகரிக வளர்ச்சி என்பது மனிதர்கள் பிரம்மிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தினசரி பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் சமீப காலமாக AI தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்களை எளிதில் மனிதர்களை விட வேகமாக செய்து அசத்தி வருகிறது.

 

விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது முதல் சாதாரண விடுப்பு கடிதம் வரை AI தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றனர். AI தொழில்நுட்பம் தற்போது திருமணத்திற்கு எடுக்கப்படும் புகைப்படங்களை உடனடியாக க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தால் உடனடியாக டவுன்லோடு செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி திருமண வரவேற்பில் ரோபோ மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டு, அவர்களின் புகைப்படம் உடனடியாக AI தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில், சேலம் மாநகரத்தின் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் மற்றும் பிரீத்தி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்து அசத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்னிவல் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் மேடையில் மணமகன், மணமகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் உடனடியாக க்யூ ஆர் ஸ்கேனர் முறையில் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

 

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாக கல்யாணம் ஆல்பம் தயார் செய்யப்பட்டு, மேடையில் அமர்ந்திருந்த திருமண தம்பதியினரிடம் கார்னிவல் ஸ்டூடியோஸ் நிறுவனம் பரிசாக வழங்கியது மணமக்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணம் நடந்து முடிந்த 2 மணி நேரங்களில் திருமண ஆல்பம் கொடுக்கப்பட்டதால் உறவினர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியடைந்தனர்.