ட்ரெண்டிங்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை- காவல்துறையினர் தீவிர விசாரணை!

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை-  காவல்துறையினர் தீவிர விசாரணை!

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டியில் உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியாயி (வயது 60). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவரின் மகளுக்கும், மகனுக்கும் திருமணமான நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில், பெருமாயி வீட்டில் பூட்டு உடைந்திருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெருமாயிக்கு தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்த பெருமாயிக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. 

இதையடுத்து, பெருமாயி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். அத்துடன், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, ரேகைகளைப் பதிவுச் செய்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10,000 கொள்ளை போனதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.