சேலம் மாவட்டம், சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 65). தச்சுத் தொழிலாளியான இவர், கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, பழனி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அத்துடன், வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜெயந்தி நேற்று (ஆகஸ்ட் 22) தீர்ப்பளித்தார்.
அதில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பழனிக்கு சுமார் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.