சேலம் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில், மனிதக்கழிவுப் பூசப்பட்ட கொடூரம் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவைக் கலந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் இதே போன்ற ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாச்சலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தூய்மைப் பணியாளர் மூலம் காலை உணவுத் திட்ட சமையல் கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக, பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மனிதக்கழிவை வீசி நபர் குறித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.