ட்ரெண்டிங்

பணம் கேட்ட ஊழியர்- ஷோரூமிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கும்பல்!

 

வீட்டுக்கே வந்து பணம் கேப்பியா? இனி யார் வீட்டிற்கும் சென்று பணம் கேப்பியா? என்று கூறி ஒரு கும்பல் ஷோரூமிற்குள் நுழைந்து, தாக்குதலில் ஈடுபட்டதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.

 

சேலம் மாவட்டம்,ஓமலூர் அண்ணா நகரில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இங்கு பைக் வாங்குவதற்காக, ஷோரூமிருக்குள்ளேயே பல தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றனர். அதன்படி, பல வாடிக்கையாளர்களும் கடனுதவி பெற்று, தங்களுக்கு பிடித்தமான பைக்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

 

பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சித்தன் என்பவர் தனியார் வங்கிக் கடனுடன் பைக் ஒன்றை அந்த ஷோரூமில் வாங்கியிருக்கிறார். இரண்டு மாதங்களாக மாத தவணையைச் செலுத்தாமல் இருந்திருக்கிறார் சித்தன்.இதனால் சித்தனை வீட்டிற்கு சென்ற ஊழியர்கள் மாதத் தவணையைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திச் சென்றிருக்கின்றனர்.

 

இதையடுத்து, தனது உறவினர்களுடன் ஷோரூமிற்குள் வந்த சித்தன்,பணியில் இருந்த ஊழியரை சரமாரியாக அடித்து, உதைத்து இனி வீட்டிற்கே வந்து பணம் கேப்பியா? எனக் கூறித் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.  

 

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள ஓமலூர் காவல்துறையினர்,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.