ட்ரெண்டிங்

பட்டமளிப்பு விழா எப்போது?-அறிவிப்பை வெளியிட்டது பெரியார் பல்கலைக்கழகம்!

 

சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா,வரும் நவம்பர் 24- ஆம்,தேதிநடைபெறும் என்று பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பெரியார் பல்கலைக்கழகத்தின் 22- வது பட்டமளிப்பு விழா வருகின்ற நவம்பர் 24- ஆம் தேதி அன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெரியார் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும்,தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு முனைவர் பட்டம் பெற்ற மாணாக்கர்களுக்கும் மற்றும் முதல் தர வரிசையில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கும் பட்டங்களை வழங்கவுள்ளார்.

 

மேலும் இதுவரை தேர்ச்சி பெற்று பட்டம் பெறாத மாணாக்கர்கள் இப்பட்டமளிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் வரும் நவம்பர் 14- ஆம் தேதி ஆகும். பல்கலைக்கழக துறைகள், பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தருமபுரி, பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழக இணையவழி மற்றும் தொலைநிலைக்கல்வி மையம் மூலமாக பட்டச்சான்றிதழுக்கு ஏற்கனவே கட்டணம் செலுத்தியுள்ள மாணாக்கர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விபரங்களுக்கு www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.