ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,000 கனஅடியை நெருங்கியது!

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10,000 கனஅடியை நெருங்கியுள்ளது.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்து வந்த நிலையில், அங்குள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும், தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (அக்.12) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,528 கனஅடியில் இருந்து 9,345 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 31.31 அடியில் இருந்து 33.10 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர்இருப்பு 8.81 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை; குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

குறிப்பாக, ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு மேல் உயர்ந்துள்ளது டெல்டா மாவட்ட விவசாயிகளை சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது.