ட்ரெண்டிங்

திருச்செந்தூரில் கடத்தப்பட்ட குழந்தை ஆத்தூரில் மீட்பு!

திருச்செந்தூரில் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன், கடந்த அக்.05- ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்கு அவர்களிடம் அறிமுகமான ஒரு பெண், முத்துராஜின் ஒரு வயது குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.

 

குழந்தையைக் காணவில்லை என முத்துராஜும், அவரது மனைவி ரதியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் அந்த பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் அந்த பெண் குழந்தையுடன், இளைஞர் ஒருவருடன் செல்வது தெரிய வந்தது. இது தொடர்பாக, கோவை, ஆலந்துறை காவல்துறையினர், குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக திலகவதி என்ற பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.

 

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் காவல்துறையினர் மீட்டனர். இந்த நிலையில், கைதான திலகவதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.