ட்ரெண்டிங்

பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியைக் கொலைச் செய்ய முயன்ற கணவருக்கு 4 ஆண்டு சிறை!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான ஆனந்தசெல்வி (வயது 22) என்பவர், அதே ஊரைச் சேர்ந்த கூலிவேலைச் செய்து வரும் பூபதிராஜன் (வயது 33) என்பவரைக் காதலித்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கணவன்- மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து கடந்த ஒரு வருடமாக ஆனந்தசெல்வி தனது தந்தை வீட்டில் இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த 2017- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23- ஆம் தேதி அன்று தந்தையின் ஏற்பட்டின் பேரில், ஆனந்த்செல்விக்கு இரண்டாவது திருமணத்திற்கான நிச்சயம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ஆனந்தசெல்வியை மறித்து, என்னை ஏமாற்றி விட்டு, வேறு ஒருவருடன் திருமணம் செய்யப் போகிறாயா? எனக் கூறிய பூபதிராஜன், அரிவாளால் வெட்டிக் ஆனந்தசெல்விக்கு காயத்தை ஏற்படுத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

 

இது குறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஆனந்தசெல்வியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பூபதிராஜன் மீது வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தது. இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை தரப்பில் விரைவாக குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பூபதிராஜன் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சிகளின் அடிப்படையில் நிரூபணமானதால், அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பூபதிராஜன் சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டார் .