ட்ரெண்டிங்

சமோசா வாங்கியவரிடம் பணத்தைக் கேட்ட கடையின் ஊழியர்களுக்கு கத்திக்குத்து!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்சர் அலி (வயது 34), சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறைப் பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அன்சர் அலியின் சகோதரர் அம்சத் அலி (வயது 28) உள்பட மூன்றுக்கும் மேற்பட்டோர் கடையில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்த கடைக்கு நேற்று (செப்.20) அதிகாலை 03.00 மணியளவில் மர்மநபர்கள் நபர்கள் 4 பேர் வந்து, சுமார் 250 ரூபாய்க்கு சமோசாவை வாங்கிப் புறப்பட்டனர். அப்போது, சமோசா கடையில் இருந்த அம்சத் அலி, அவர்களிடம் வாங்கிய சமோசாவிற்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

 

இதற்கு அந்த மர்மநபர்கள் யாரிடம் பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டு, தாங்கள் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அம்சத் அலியின் காலில் குத்திவிட்டு, அங்கிருந்து மீண்டும் கிளம்பினர். பின்னர், நண்பர்களுடன் சமோசா கடைக்கு வந்த மர்மநபர்கள், கடையில் இருந்த அம்சத் அலி மற்றும் ஊழியர்களைக் கட்டையால் தாக்கியும், குத்தியும், இருசக்கர வாகனங்களைச் சேதப்படுத்தியும், அங்கிருந்து சென்றனர்.

 

தாக்குதலில் படுகாயமடைந்த அம்சத் அலி மற்றும் ருக்குல்லா ஆகியோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இது குறித்து தகவலறிந்த காவல்துறை துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் அம்மாப்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, வழக்குப்பதிவுச் செய்து தப்பியோடிய மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.