ட்ரெண்டிங்

மகாத்மா காந்தியின் பிறந்தநாள்- அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி மரியாதை!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் விழா, சேலத்தில் இன்று (அக்.02) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவச்சிலைக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.