ட்ரெண்டிங்

குடிபோதையில் திருநங்கையிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை!

சேலம் மாவட்டம், வாழப்பாடிக்கு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). ஆம்னி வேனை சொந்தமாக வைத்திருக்கும் சதீஷ்குமார், கிடைக்கும் நேரத்தில் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 

சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில், நேற்று (செப்.28) இரவு சதீஷ்குமார் மது அருந்திவிட்டு வாழப்பாடி சந்தைப்பேட்டை அருகே வசிக்கும் திருநங்கை நவியா (வயது 32) என்பவர் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர், நவியாவை சில்மிஷமும் செய்துள்ளார்.

 

அப்போது நவியா, இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இரவில் வந்து இப்படி செய்வது தவறு; வீட்டை விட்டு வெளியில் செல்லுங்கள் எனக் கூறியதாகவும், ஆனால் சதீஷ்குமார் வெளியில் செல்லாமல் தொடர்ந்து நவியாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதில் கோபமடைந்த நவியா அருகில் கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

இதில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அக்கம்பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சதீஷ்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (செப்.29) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 

இது குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.