ட்ரெண்டிங்

வழிமறித்துத் தாக்கிப் பணத்தைப் பறித்துச் சென்ற 3 பேர் கைது!

சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் உள்ள சஞ்சீவிராயன்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 27). இவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடிக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மேற்கு ராஜபாளையம் ஊராட்சிப் பகுதியில், அவரை வழிமறித்த மூன்று பேர், மதுப்பாட்டிலால் தாக்கி அவரிடம் இருந்து ரூபாய் 50,000 ரொக்கத்தைப் பறித்துச் சென்றனர். 

 

இது குறித்து புகாரின் அடிப்படையில் வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 26), கிச்சிப்பாளையம் காலனியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25), குறிஞ்சி நகர் ஹவுஸிங் பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி (வயது 24) ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். 

 

அப்போது, அவர்கள் குணசேகரனிடம் பணம் பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 50,000 ரொக்கத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன், அந்த மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.