ட்ரெண்டிங்

எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தனபாலுக்கு இடைக்காலத் தடை!

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், கனகராஜின் சகோதரர் தனபால் இதுபோன்ற பேட்டிகளை அளித்து வருகிறார். எனவே, தன்னை கொடநாடு வழக்குடன் தொடர்புப்படுத்திப் பேச தடை வேண்டும் என்று ரூபாய் 1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று (செப்.26) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 

மேலும், இந்த வழக்கு தொடர்பாக தனபால் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.