ட்ரெண்டிங்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

சிறப்புப் பருவ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது,எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று. அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் இயற்கை சீற்றத்தினால் தீப்பிடித்தல் ஆகிய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

 

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்டு 2023 மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு தற்பொழுது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். நடப்பு வருடம் இப்கோ டோக்யோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

நெல் (சம்பா) பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 352 செலுத்தி நவம்பர் 15- ஆம் தேதி வரையிலும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு முறையே ரூபாய் 480, ரூபாய் 674 செலுத்தி அக்டோபர் 31- ஆம் தேதி வரையிலும் பயிர் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.

 

விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகக்துடன் உரிய பிரீமியத் தொகைச் செலுத்தி பயிர் காப்பீடு செய்து, இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு உழவன் செயலி மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.