ட்ரெண்டிங்

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அழைப்பு!

வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி மூலம் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கம்பு, குதிரைவாலி, சாமை, தினை, கேழ்வரகு, எள், கரும்பு, நிலக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து, துவரை, பருத்தி, மக்காச்சோளம், செம்மை நெல் மற்றும் பாரம்பரிய நெல் ஆகிய பயிர்களில் மாநில அளவில் அதிக உற்பத்தித்திறன் பெறும் விவசாயிகளை பயிர் விளைச்சல் போட்டி மூலம் தேர்வுச் செய்து பரிசுகளை வழங்கிடும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு தொகை முதல் பரிசாக ரூபாய் 2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 1 லட்சமும் வழங்கப்படும். விவசாய நடுவர்களுக்கான போக்குவரத்துச் செலவினமும் ரூபாய் 10,000 மேற்கொள்ளப்படும்.

கடைசி அறுவடைத் தேதி 15/03/2024 குறைந்தபட்சம் சாகுபடி பரப்பளவாக 1 ஏக்கரில் 50 சென்ட் பரப்பளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அறுவடை செய்ய வேண்டும். நில உடைமைதாரர்கள் மற்றும் நிலக் குத்தகைதாரர்கள் இப்போட்டியில் பங்கு பெற தகுதியுடையவர்கள்.

போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூபாய் 150 பதிவுக் கட்டணம் செலுத்தி உத்தேச அறுவடைத் தேதிக்கு 30 நாட்கள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு நகல்களில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்திய ரசீதுடன், இணைத்து 30/12/2023- க்குள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.