ட்ரெண்டிங்

தீரன் சின்னமலையுடன் கூட்டணி அமைத்த திப்பு சுல்தான்-  தீரன் சின்னமலை குறித்த சுவாரஸ்ய தகவல்!

 

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் நாளை (ஆகஸ்ட் 03) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் போன்றவர்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் பிறந்து நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும் வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். தீர்த்தகிரி கவுண்டர் என்றும் தீர்த்தகிரி சர்க்கரை” என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல் அவர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளை கற்றுத் தேர்ந்து துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்கு கற்றுத்தந்து இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். 

கொங்கு மண்ணில் பிறந்து வீரத்திற்கு அடையாளமாக விளங்கி தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறை காணலாம். 

தீரன் சின்னமலை அவர்கள் இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புக் கலைகள் அறிந்திருந்தாலும் அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்று கொடுத்து சிறந்த போர்ப் பயிற்சி அளித்து அவரது தலைமையில் இளம் வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார். 

தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்குநாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் அந்நாட்டில் வரிப்பணம் அவரது அண்டை நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள் தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.

தீரன் சின்னமலை வளர வளர நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில் அதாவது டிசம்பர் மாதம் 7-ஆம் நாள் 1782-ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால் அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். ஆகவே அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைகோர்க்க முற்பட்டார். ஏற்கனவே திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான் அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி சித்தேஸ்வரம், மழவள்ளி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து வெற்றிவாகை சூடியது. 

மூன்று மைசூர் போர்களிலும் திப்பு சுல்தான் - தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால் திப்பு சுல்தான் மாவீரன் நெப்போலியினிடம் நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவி புரியக் கோரி தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவி புரிந்தாலும் தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரதிர்ஷ்டவசமாக மைசூர் மன்னர் திப்பு சுல்தான் அவர்கள் நான்காம் மைசூர் போரில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார். 

திப்பு சுல்தானின் வீரமரணத்திற்குப் பின்னர் கொங்கு நாட்டில் ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழி தீர்க்கும் வண்ணமாக அவருக்கு சொந்தமான சிவன்மலை - பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்கு பயிற்சி அளித்து பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். 

பின்னர் கி.பி.1799-ல் தனது படைகளை பெருக்கும் விதமாக திப்புவிடம் உள்ள போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தன் படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்று திரட்டினார்.லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5-ஆம் பட்டாளத்தை அழிக்க நினைத்த அவர் 1801-ல் கோவைக்கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. மேலும் 1802-ல் சென்னிமலையில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை தவிடு பொடியாக்கி 1803-ல் அரச்சலூரில் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றி கண்டார்.

மேலும் ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் அவரது சமையல்காரன் நல்லப்பன் மூலமாக சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர். அவர் தம்பி கருப்பு சேவையும் உடன் வீரமரணம் எய்தினர். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ஆம் (ஆடிப்பெருக்கு) நாளன்று சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் அரசு சார்பில் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலைக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.