கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று (செப்.11) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்ததாவது, "கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 2023-2024- ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும், அவற்றில் 3 முகாம்களை சேலம் மாவட்டத்தில் நடத்தவும் அறிவுரைகள் பெறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 05- ஆம் தேதி அன்று சேலம் சோனா கல்விக்குழும வளாகத்தில் முதல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் சேலம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து 5,000- க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும், 150- க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், நிறுவனங்கள் நேர்காணல் நடத்துவதற்கான அறைகள் ஒதுக்கீடு செய்யவும், மேலும் காவல் துறையினர் போதுமான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளவும், மருத்துவத் துறை மருத்துவ முகாம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேலைநாடுநர்களுக்கு உதவிடும் வகையில் உதவி மையங்களை அமைத்திடவும், மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களை வீல்சேர் வசதி உள்ளிட்ட ஏற்பாடு செய்யுவும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


