ட்ரெண்டிங்

தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!

தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு! 

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்த தம்பதி கோவிந்தன் (வயது 56)- லட்சுமி (வயது 50). இவர்களுக்கு தனம் (வயது 18) என்ற மகளும், நந்தீஸ்வரன் (வயது 14) என்ற மகனும் உள்ளனர். இதில், நந்தீஸ்வரன் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8- ஆம் வகுப்புப் படித்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி கோவிந்தன், தனது நண்பர் மற்றும் மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு, எடப்பாடியில் உள்ள பெரிய ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். பின்னர், ஏரிக்கரையில் மகனை அமர வைத்துவிட்டு, கோவிந்தன் தனது நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, கரைக்கு வந்த கோவிந்தன், தனது காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

ஏரியைச் சுற்றி தனது மகனை கோவிந்தன் தீவிரமாகத் தேடிய நிலையில் கிடைக்கவில்லை. இதையடுத்து, எடைப்பாடி காவல் நிலையத்தில் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்புத்துறையினரை வரவழைத்து, ஏரியில் மாணவன் நந்தீஸ்வரனின் உடலை தீவிரமாகத் தேடினர். 

நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு நந்தீஸ்வரன் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.