ட்ரெண்டிங்

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்! 

 

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (மார்ச் 12) சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது சேலம் அயோத்தியாப்பட்டினம் அருகில் சாலை விபத்தில் சிக்கிய நிலையிலிருந்த பெண்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உரிய சிகிச்சை அளித்திட நடவடிக்கை மேற்கொண்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் இன்று மாலை சேலத்தில் இருந்து ஆத்தூரில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் எதிர்பாராத விதமாக ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்தனர். 

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் இதனை கவனித்தவுடன் உடனடியாக தனது வாகனத்திலிருந்து இறங்கி சம்பவ இடத்திற்குச் சென்று விபத்துக்குள்ளான பெண்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும் அவ்விடத்திற்கு வந்தனர். விபத்தில் காயமுற்ற இரு பெண்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுலாத்துறை அமைச்சர் தொடர்புடைய மருத்துவமனையினை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்திடவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில், விபத்தில் காயமுற்ற இரு பெண்களும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.