ட்ரெண்டிங்

மே 01-ல் சேலத்தில் கிராம சபைக் கூட்டம்! 

 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் மே 01- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே 01- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

அதேபோன்று, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம் (KKI), ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்டம் (RRH), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம். ஊராட்சி வளர்ச்சி குறியீடு (PDI) மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. 

எனவே, மேற்கண்ட கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.