மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஜூலை 31) தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் வெள்ள நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூபாய் 673.88 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியினை எட்டும் பொழுது அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ள நீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளங்களுக்கு நீர் சென்றடையும் வகையில்
திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,061.16 ஏக்கர் நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியினை எட்டியுள்ள நிலையில் 56 ஏரிகளுக்கு மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து நீர் நிரப்பும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டதையொட்டி, மேட்டூர் வட்டம், எம்.காளிப்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு இந்நீர் வந்தடைந்தது. இந்நிகழ்வினை சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். இதன்மூலம் விவசாயப் பயன்பாடு மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி இ.ஆ.ப., திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தயாளகுமார், மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ராமலிங்கம், சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.



-hcTFAGMRGb.jpg)