ட்ரெண்டிங்

"கோவை- ஈரோடு ரயிலை சேலம் வரை நீட்டிக்க வேண்டும்"- மக்களவையில் பார்த்திபன் எம்.பி. வலியுறுத்தல்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 03- ஆம் தேதி அன்று விதி 377- ன் கீழ் மக்களவையில் பேசிய சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், "சேலம் மற்றும் சேலத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு, திருப்பூர், தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்துக் கொண்டுள்ளனர்.

இதில் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர். தனியார் துறைப் பணியாளர்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு செல்வோர், குறிப்பாக தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என அனைவரும் உள்ளனர். இந்நிலையில், சேலத்திலிருந்து அதிகாலை 05.22 மணிக்கு வண்டி எண் 13351 ஆலப்புழா எக்ஸ்பிரஸிற்கு பிறகு 09.45 மணிக்கு வண்டி எண் 12626 கேரளா எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி 30 நிமிடங்களுக்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை. 

இதேபோல், கோவையிலிருந்து மாலை 04.25 மணிக்கு வண்டி எண் 17229 சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 08.00 மணிக்கு வண்டி எண் 16382 புனே எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி நேரத்திற்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை. இதனால், காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும், எந்தவொரு வண்டியும் இயக்கப்படாததால், மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பேருந்து பயணச்செலவிற்கே செலவிட வேண்டி இருப்பதால், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஆகவே, ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 07.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06801-யை சேலத்தில் இருந்து காலை சுமார் 7 மணி அளவில் புறப்படுமாறும், மறுமார்கமாக, கோவையிலிருந்து மாலை 06.10 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் வண்டி எண் 06800- யை சேலம் வரை நீட்டித்து இயக்க பரிந்துரைத்து, அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.