ட்ரெண்டிங்

விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10- ல் நேர்காணல்- தி.மு.க. அறிவிப்பு! 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மார்ச் 10- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.