ட்ரெண்டிங்

நீர்த்தேக்க தொட்டியில் மிதந்த நாயின் உடல்- மக்கள் போராட்டம்!

சேலத்தில் குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாயின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, குடிநீர் விநியோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50- க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆட்டையான்வட்டம் பகுதியில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

திடீரென குடிநீரில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் நீர்த்தேக்கத் தொட்டியைத் திறந்துப் பார்த்துள்ளனர். அதில், நாய்க்குட்டி ஒன்றின் உடல் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாயின் உடலை வெளியே எடுத்து அப்புறப்படுத்தியதுடன், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த தண்ணீரையும் வெளியேற்றி தொட்டியைத் தூய்மைப்படுத்தினர். 

நாயை அடித்துக் கொன்று குடிநீர் தொட்டியில் போட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.