நீட் தேர்வை முற்றிலுமாக ரத்துச் செய்வதற்காக, முதலமைச்சர் சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, "தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளனர். ஆறு மாதங்களில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். இனி தனி தனியாகப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான அனைத்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்" என்றார்.