ட்ரெண்டிங்

சூரிய ஒளி மூலம் மின்சாரம்... மின் கடவு பணிகள் தொடக்கம்!

சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 6- வது வார்டில் உள்ள செட்டிச்சாவடி பகுதியில் 5.50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய சூரிய ஒளி மின்சக்தி ஆலை 2 அலகுகள் ரூபாய் 23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை கோரிமேடு மின்சார பகிர்மான நிலையத்திற்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் மின் கடவு பணிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்போது மாநகராட்சி மேயர் தெரிவித்ததாவது, "சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக சூரிய ஒளி மின்னாக்கி ஆலை செட்டிச்சாவடியில் 3.00 மெகாவாட் மற்றும் 2.50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் ரூபாய் 23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மின்னாக்கி ஆலை 9,163 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த மின் உற்பத்திக்கான மின் கடவு பணிகள் ரூபாய் 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கோரிமேடு துணை மின் நிலையத்திற்கு வழங்கப்படும். இதற்கான பணிகள் 4 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மின்சாரம் கோரிமேடு துணை மின் நிலையத்திற்கு வழங்குவதால் சேலம் மாநகராட்சிக்கு ஓராண்டிற்கு ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மின் கட்டண சேமிப்பு ஏற்படும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.