ட்ரெண்டிங்

பதக்கங்களை வென்று அசத்திய சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள்!

 

 தென்னக ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே கோட்டங்களில் சேலம் ரயில்வே கோட்டம் பாதுகாப்பு, பொறியியல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் கேடயமும் தனிநபர் சாதனை பிரிவில் 12 விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

 

68- வது ரயில்வே வார விழாவில் தென்னக ரயில்வே மண்டல அளவில் 8 கேடயங்களை வென்று சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது. திறமையான இயக்கம், பொறியியல், பணியாளர் திறன்மேம்பாடு, மின் நுகர்வில் மாற்று எரிசக்தி பயன்படுத்தியது, மின்னியல் துறை சிறந்த செயல்திறன், சிறந்த கையிருப்பு கூடத்திற்கான பிரிவு, தூய்மையாக பராமரித்தல், பாதுகாப்பு உள்ளிட்ட 8 கேடயங்களை வென்று சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

 

இதேபோன்று, ரயில் விபத்துகள் நேராமல் களப்பணியாற்றியது, ரயில்வே டிராக்குகளை நல்ல முறையில் பராமரித்தது,பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தது உள்ளிட்ட பணிகளுக்காக 12 பேருக்கு விஷிஷ்ட சேவா விருதும் வழங்கப்பட்டது. சாதனை படைத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா, கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.

 

விருதுகளுடன் சேலம் கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்களின் சாதனைகளை பாராட்டி சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா பாராட்டு சான்றிதழ் மற்றும் பூங்கொத்துகளை வழங்கினார்.

 

இந்நிகழ்வில் முதன்மை இயக்ககப்பிரிவு மேலாளர் அனித் பிரகாஷ், கோட்ட பொறியாளர் எஸ்.கார்த்திகேயன், கோட்ட பணியாளர் நல அலுவலர் பி.கே.சவுந்தர பாண்டியன், கோட்ட மின்னியல் துறை பொறியாளர் பி.முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.