ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவு!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணையானது சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட பழனிசாமி குழு சமீபத்தில் தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானதாலும், மேல் விசாரணை நடத்த ஏதுவாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவாளர் தங்கவேல் விரைவில் பணி ஓய்வுப் பெறவுள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.