ட்ரெண்டிங்

பட்டப் பகலில் பிரபல ரவுடி படுகொலை!

 

பட்டப் பகலில் பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சேலம் மாநகர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாநகரத்திற்கு உட்பட்ட ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரசுராம். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

இந்த நிலையில், ஜான்சன்பேட்டையில் உள்ள கிழக்கு தெரு 2-ல் வசித்து வரும் பிரபல ரவுடி சின்னத்தம்பி வீட்டிற்கு இன்று மதியம் சென்ற பரசுராம், செலவுக்கு பணம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு சின்னத்தம்பி தர மறுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, சின்னத்தம்பி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பரசுராம் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டி உள்ளார். பின்னர், சின்னத்தம்பி தப்பியோடி உள்ளார்.

 

இதில் ரவுடி பரசுராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர், பரசுராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தப்பியோடிய சின்னத்தம்பியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் மாநகர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.