ட்ரெண்டிங்

மதிய உணவுத் திட்டத்திற்கான தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 

மதிய உணவுத் திட்டத்திற்கான செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்டப் பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூபாய் 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூபாய் 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூபாய் 0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 4,114 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன்மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவர்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.