ட்ரெண்டிங்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மேட்டூரில் தொடக்கம்!

 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜன.31) தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்ததாவது, பொதுமக்களின் இடங்களுக்கே சென்று, குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண, அரசு இயந்திரம் களத்திற்கே சென்று பணியாற்றும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இனி ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமானது, இன்றையதினம் காலை 09.00 மணிக்கு சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் தொடங்கியுள்ளது. மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட 48 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுக் காண திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை 08.30 மணிக்கு மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணிக்குச் செல்லும் அரசு அலுவலர்களுடன் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேட்டூர் வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் இன்றைய தினம் காலை 09.00 மணி முதல் 01.30 மணி வரை இ-சேவை மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

மேலும், பகல் 02.30 மணி முதல் 04.30 வரை மேட்டூர் வட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலர்களின் கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை பொது மக்களுடனான கலந்துரையாடலும், மாலை 06.00 மணி முதல் தொடர்புடைய வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள். அரசு விடுதிகள், பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 06.00 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.