ட்ரெண்டிங்

தி.மு.க. நிர்வாகிகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்த அமைச்சர் உதயநிதி!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று (ஜன.22) கோலாகலமாக நடைபெற்றது. மாநாட்டில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. இளைஞரணியின் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

 

அதேபோல், தமிழக அமைச்சர்களும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய, பேரூராட்சி, பகுதி மாவட்டம் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். 

 

இந்த நிலையில், மாநாட்டைச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்திய தி.மு.க.வின் சேலம் மாவட்டத்தின் பகுதி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, கிளை நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்தும், தங்க மோதிரம் அணிவித்தும் பாராட்டுத் தெரிவித்தார். 

 

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் சேலம் மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.