ட்ரெண்டிங்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! 

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சியின் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் நேற்று (ஆகஸ்ட் 03) மாலை இருசக்கர வாகனத்தில் கே.மோரூரில் இருந்து காடையாம்பட்டிக்கு சென்றுக் கொண்டிருந்தார். 

அதேபோல், கே.மோரூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 27). இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் காடையாம்பட்டியில் இருந்து கே.மோரூருக்கு சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, தீவட்டிப்பட்டி கே.மோரூர் பெருமாள் கோயில் அருகே முன்னாள் சென்ற சரக்கு வேனை முந்திச்செல்ல  ராஜதுரை   முயன்றுள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சக்திவேல் மற்றும் ராஜதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இரண்டு பேர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.