ட்ரெண்டிங்

தி.மு.க. இளைஞரணி மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!

 

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள தி.மு.க. இளைஞரணியின் மாநில மாநாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுச் செய்தார்.

 

வரும் ஜனவரி 21- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் சேலம் மாவட்டத்தில் முகாமிட்டு, மாநாட்டு பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞரணி மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தார். கட்சியின் கொடிக் கம்பம், மேடை பகுதிகள், கட்சியின் தொண்டர்கள் அமரும் இடம், கார் பார்க்கிங், வாகனம் நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு, கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆய்வின் போது, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.