ட்ரெண்டிங்

சுடர் தொடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 

சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு அருகே தொடங்கி வைத்தார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.

 

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் தி.மு.க. இளைஞரணியின் 2ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு அருகே இன்று (ஜன.18) தொடங்கி வைத்தோம்.

 

இந்த சுடர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது.

 

சேலம் மாநாட்டுத் திடலில் வரும் ஜனவரி 20- ஆம் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கவுள்ளேன்.

 

கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும், மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்; பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.