ட்ரெண்டிங்

காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்!

 

பொங்கல் விழாவின் கடைசி நாளான இன்று (ஜன.17) காணும் பொங்கலை பொதுமக்கள் தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

 

காணும் பொங்கலையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அலைமோதியது. குடும்பம், குடும்பமாக படையெடுத்துள்ள மக்கள், ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும், பூங்காக்களைச் சுற்றிப் பார்த்தும் மகிழ்ந்தனர். பனிமூட்டத்துடன் கூடிய இயற்கை அழகைக் கண்டு வியந்தனர். 

 

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஏற்காட்டில் சாலையோர வியாபாரம் களைகட்டியது. அதேபோல், மேட்டூர் அணை, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, 1,008 சிவலிங்கம் திருக்கோயில், கந்தாஸ்ரமம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.