ட்ரெண்டிங்

ஆம்புலன்ஸிலே பெண்ணுக்கு பிரசவம்!

 

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், சொராகபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சத்யவாணி- மாதையன். நிறைமாத கர்ப்பிணியான சத்யவாணிக்கு நேற்று (ஜன.06) நள்ளிரவு பிரசவ ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நள்ளிரவு 12.44 மணியளவில் 108 ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்ணன் மற்றும் அவசரகால மருத்துவ நுட்புனர் சிகாமணி ஆகியோர் சத்யவாணியின் வீட்டிற்கு சென்று அவரை பத்திரமாக ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு, சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது, சத்யவாணிக்கு பிரசவ வலி அதிகம் ஏற்படவே, செட்டிப்பட்டி என்ற இடத்தில் சாலையோரம் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, பெண்மணிக்கு அவசரகால மருத்துவ நுட்புனர் சிகாமணி, அந்த பெண்ணுக்கு பிரசவ சிகிச்சைப் பார்த்துள்ளார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், தாயும், சேயும் பத்திரமாக நாகலுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.

 

நள்ளிரவில் சாமார்த்தியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், மருத்துவ நுட்புனருக்கும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.