ட்ரெண்டிங்

விறுவிறுப்பாக நடைபெற்ற நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு!  

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் இன்று (பிப்.27) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார்கள்.

இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக. ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை சேலம் வருவாய் கோட்டாட்சியர் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.