ட்ரெண்டிங்

பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு சிறை!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் வடக்கு உடையார்பாளையத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஜீவா (வயது 40). இவர் அதே பகுதியில் டெய்லர் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் 29- ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு கடைக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், ஜீவா மீது மிளகாய் பொடியைத் தூவியதுடன், தாக்கியும் உள்ளார்.

 

அதைத் தொடர்ந்து, ஜீவா அணிந்திருந்த 3.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதையடுத்து, ஜீவா உடனடியாக, ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுச் செய்தனர்.

 

அதில், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (வயது 27) நகையைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மனோஜ்குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து, மனோஜ்குமார் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.