ட்ரெண்டிங்

பூத் சிலிப் வழங்கும் பணியினை நேரில் ஆய்வு செய்த சேலம் ஆட்சியர்! 

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு, வீடாகச் சென்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 02) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 14,56,299 ஆண் வாக்காளர்கள், 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 இதர வாக்காளர்கள் ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்குப்பதிவினை எவ்வித சிரமமுமின்றி வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கிடும் வகையில் நேற்றைய தினம் முதல் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கிடும் வகையில் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியானது வரும் ஏப்ரல் 13- ஆம் தேதிக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பூத் சிலிப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. இவ்வாக்காளர் கையேட்டில் வாக்காளர் தங்களது தகவல்களை சரிபார்க்கவும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளவும், வாக்களிப்பதற்கான முறைகள் குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 


குறிப்பாக, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பூத் சிலிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வாக்காளர்களிடம் வழங்கப்பட வேண்டுமெனவும், வேறு நபர்களோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் மூலமாகவோ பூத் சிலிப்புகள் வழங்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மேலாய்வு செய்து கண்காணித்து உறுதி செய்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் வந்து பூத் சிலிப்புகள் வழங்குவதால் அதனை அக்குடும்பத்தில் உள்ள வாக்காளர் எவரேனும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சேலம், கோரிமேடு, சின்னகொல்லப்பட்டியில் இன்றைய தினம் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் உரிய அலுவலர்கள் மூலம் மட்டுமே பூத் சிலிப் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவது குறித்து உறுதி செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குள் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு விடுபடாமல் வழங்கிட வேண்டுமெனவும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சேலம் வருவாய் கோட்டாட்சியருமான அம்பாயிரநாதன், வருவாய் வட்டாட்சியர் தாமோதிரன் ஆகியோர் உடனிருந்தனர்.