ட்ரெண்டிங்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞருக்கு சிறை- நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு! 

சேலம் மாவட்டம், கருமலைக்கூடல் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு வயது 25. இவர் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி 17- ஆம் தேதி அன்று சாலையில் நடந்துச் சென்ற 17 வயது சிறுமியை வழிமறித்து, பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்றுள்ளார். 

அப்போது, அந்த சாலையில் இருந்தவர்கள் சிறுமியைக் காப்பாற்ற வந்த போது, அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

இது தொடர்பான வழக்கு விசாரணை, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வாதங்களையும், அரசுத் தரப்பு வாதங்களையும், குற்றம் சாட்டப்பட்டவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயந்தி, அதனைப் பதிவு செய்து கொண்டார். 

வழக்கு தொடர்பான வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்ற பிரகாஷுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும். 1,500 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.