ட்ரெண்டிங்

ஜன.21- ல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு!

 

வரும் ஜனவரி 21- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 17- ஆம் தேதி மாநாடு நடத்த தி.மு.க. தலைமை தேதி அறிவித்தது.

 

இந்த சூழலில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டது,

 

இதன் காரணமாக, தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை தேதி குறிப்பிடாமல் தி.மு.க. தலைமை ரத்துச் செய்தது. இதனிடையே, அவ்வப்போது தமிழக நிர்வாகம் மற்றும் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த நிலையில், வரும் ஜனவரி 21- ஆம் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.