ட்ரெண்டிங்

பா.ம.க., வி.சி.க. இடையே போஸ்டர் யுத்தம்- மேட்டூரில் பரபரப்பு! 

பா.ம.க., வி.சி.க. இடையே போஸ்டர் யுத்தம்- மேட்டூரில் பரபரப்பு! 

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம் மாவட்டம், மேட்டூருக்கு வருகை தரும் பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பா.ம.க.வினர் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைத்துள்ளனர். 

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக மெய்யழகன் பொறுப்பேற்று கொண்டதையடுத்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவரது கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். குறிப்பாக, பா.ம.க.வினர் ஒட்டிய போஸ்டர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்த பா.ம.க.வினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். அதைத் தொடர்ந்து, கட்சியின் பேரூராட்சி செயலாளர் லுதீன் குமார் தலைமையிலான பா.ம.க.வினர், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்துவைச் சந்தித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் மனுவை அளித்தனர். 

பா.ம.க. மற்றும் வி.சி.க.வினரின் போஸ்டர் யுத்தம் மேட்டூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.