சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள், கட்சியின் நிர்வாகிளுக்கு ஆறுதல் கூறினர்.
அதேபோல், நடிகர்கள் ராதா ரவி, வாகை சந்திரசேகர், சுந்தர்.சி, நடிகைகள் கவுதமி, குஷ்பூ, இயக்குநர்கள் பாக்கியராஜ், பார்த்திபன் ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.