ட்ரெண்டிங்

லாட்டரி சீட்டு விற்பனை: முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கைது!

 

ஓமலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, புளியம்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு பெண் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர்.

 

அவரை கைது செய்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தருமபுரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரன் என்பவரது மனைவி மனோன்மணி என்பதும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மனோன்மணி கடந்த ஐந்து ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

 

இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், பின்னர் எச்சரித்து பிணையில் விடுவித்தனர்.